திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பால் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பது குறித்து கனிமொழி எம்.பி தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
கனிமொழி எம்.பி தலைமையில்,மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் சென்னையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்தல் தொடர்பான வல்லுநர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம், கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் நபார்டு ஆகிய நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.