கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாகி கருப்பசாமி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின் முன்னிலை வகித்தார்.
கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் கீழ்க்கண்ட தீர்மானங்களை முன்மொழிந்தார். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறலைக் கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், மணிப்பூர் மலைகளில் கிடைக்கும் கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு மணிப்பூர் கலவரத்தை கண்டும்காணாமல் இருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் மது உள்ளிட்ட அனைத்து வகை போதைப்பொருள்கள் பயன்பாட்டினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்து நிலையம் செல்லும் இளையரசனேந்தல் சாலையில் மின்விளக்குகளே இல்லாத ஆபத்தான சூழல் உள்ளதைக் கண்டித்தும் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,இக்கூட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் நிர்வாகிகளான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச்செயலாளர் கதிரேசன், நாம்தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு செயலாளர் மருதம் மாரியப்பன், இந்தியக் கலாச்சார நடபுறவுக்கழகத்தின் மாவட்டத் துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார், தமிழ்நாடு காமராஜர் பேரவையின் தலைவர் நாஞ்சில் குமார், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் தலைவர் காளிதாஸ், ஜெய்கிரிஷ் அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர், களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தலைவர் மேரிஷீலா, மக்கள் நீதிமையத்தின் மாவட்டப் பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் நிர்வாகி கலைச்செல்வன், பறையர் மக்கள் பேரவையின் தலைவர் தாவீது ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.