கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு கூடுதல் பேருந்து சேவையை  அமைச்சர்  கீதாஜீவன் துவக்கி வைத்தார்.   தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கை வந்ததையடுத்து இன்று கூடுதல் பேருந்து சேவையை  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதாஜீவன் துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர்  கருணாநிதி, ஒன்றிய சேர்மன்  கஸ்தூரி, திமுக ஒன்றிய  செயலாளர்  முருகேசன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சீனிவாசன், மதிமுக நகர செயலாளர் பால்ராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோவில்பட்டி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கூடுதல் பஸ் நிலையம் - அண்ணா பஸ் நிலையம் இடையே சர்குலர் பஸ் ஏற்றப்படும். இந்த பஸ் ரயில்வே நிலையம் வரை செல்லும். இந்த சர்க்குலர் பஸ் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் பஸ் நிலையத்தில் 98 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.