“எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ்” தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு!
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி நாள் உறுதிமொழியனை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோரால் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டுவர பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலக தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன்.” என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இதில் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட காவல் அமைச்சுப் பணி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.