தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இதையொட்டி இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூரில் கிராம மக்கள் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையிலும், குளத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமதி மார்ச் செல்வி பாலமுருகன் முன்னிலையிலும் அக்கிராமத்தில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து தீபாராதனை காட்டி வணங்கி கட்சியினர் மரியாதை செலுத்தினர்.பின் அங்கிருந்த பொதுமக்கள், கட்சியினர் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை கண்டுகளித்தனர்.