ஓட்டப்பிடாரம் அருகே வனத்துறை அனுமதியின்றி செம்மரங்களை வெட்டும் மர்ம நபர்கள் : அரசு கடும் எச்சரிக்கை!
துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி சாலையில், ஆரைக்குளம் மலைப்பகுதியில், 90 ஏக்கரில் வளர்க்கப்பட்ட 190 செம்மரங்கள் வனத்துறையின் அனுமதியை மீறி வெட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று அந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்பட்ட செம்மரங்களை வெட்டிக் கொள்ள வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. அந்த நிலம் தொடர்பாக சிலர் ஆட்சேபனை தெரிவித்ததால், வனத்துறை அனுமதியை ரத்து செய்தது. இதனால், செம்மரங்கள் அதே இடத்தில் வேரோடு பிடுங்கப்பட்ட நிலையில், அங்கேயே கிடப்பதாக ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, அந்த செம்மரங்களை குறிவைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர், முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புகாரைத் தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஆனந்த் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், போலீசார் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தனர். அந்த இடத்தை அளக்கும் பணியில் ஈடுபட்டனர்.
'செம்மரங்களை யாரும் வெட்டக்கூடாது. ஏற்கனவே வெட்டி அங்கு கிடக்கும் செம்மரத்தடிகளை அப்புறப்படுத்தக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என தாசில்தார் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.