சீன லைட்டர் இறக்குமதிக்குத் தடை:கனிமொழி எம்.பிக்கு நன்றி தெரிவித்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்!
சீனாவிலிருந்து சிகரெட் லைட்டர் உதிரிபாகங்கள் மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் அதை நம்பியுள்ள தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்தது. இதனால் பல இன்னல்களுக்கு ஆளான தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களது தொழிலைப் பாதுகாக்க சீன லைட்டர்கள், உதிரி பாகங்களைத் தடை செய்ய வேண்டும் எனத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் மனு அளித்திருந்தனர். இதுகுறித்து பலமுறை கனிமொழி கருணாநிதி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியும், துறை சார்ந்த அமைச்சர்களைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். இதன் விளைவாக, கடந்த 13ஆம் தேதி சீன பொருட்களான சிகரெட் லைட்டர் உதிரிபாகங்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு மத்திய அரசு தற்போது தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், சீன லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்ததற்கு உறுதுணையாக இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி MP யை, கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.