திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள்: குருவிக்கார பெண்களிடம் குறைகளை கேட்டறிந்த கனிமொழி MP!


அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் நவம்பர் 2ம்தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. 


கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தங்குவதற்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம், கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள இடங்கள், பேருந்து நிலையம், பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி ஏற்பாடுகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து அப்ப பகுதியில் பாசிமணி விற்பனையில்  ஈடுபட்டிருந்த குருவிக்கார பெண்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் ஸ்ரீனிவாசன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.