தூத்துக்குடியில் முன் விரோதத்தில் அண்ணன், தம்பியை தாக்கிய 4பேர்   கைது!



தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சாமிநகரை சேர்ந்தவர் அய்யாதுரை மகன் பேச்சிதங்கம் (32). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது முள்ளக்காடு ராஜு நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முகேஷ் (21) என்பவரின் மாமனார் மீது பைக் மோதியதில் அவருக்கு சிறிதாக காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ், பேச்சிதங்கத்தை கையால் தாக்கி செல்போனை பறித்துசென்று விட்டாராம். இது குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் இருவரையும் சமாதானம் செய்து செல்போனை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே நேற்றிரவு பேச்சித்தங்கம் தனது தம்பியான அலெக்ஸ் பொன்ராஜுடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த முகேஷ் மற்றும் அவரது அண்ணன் மாரியப்பன் (22), அவரது நண்பர்கள் மாரிமுத்து மகன் சின்னராஜ் (29), ராமசாமி மகன் இசக்கி பாண்டி (39) ஆகியோருடன் சேர்ந்து அண்ணன் - தம்பி இருவரையும் கம்பால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து முகேஷ், அவரது அண்ணன் மாரியப்பன், சின்னராஜ், இசக்கி பாண்டி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.