எட்டயபுரம் அருகே இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் மாரீஸ்வரி என்பவர் தனது சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆகியோருக்கு இறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ரூ.3500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார் 



இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் மாரீஸ்வரி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை அலுவலகத்தில் சந்தித்து வழங்கியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் 2012ல் கோவில்பட்டி நகர கிராம நிர்வாக அலுவலராக இருந்த போது பட்டா மாற்றம் தொடர்பாக ரூ.3000 லஞ்சம் வாங்கியதாக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.