தூத்துக்குடியில் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று டெலிகிராமில் (Telegram) லிங்க் அனுப்பி ரூபாய் 5,90,830/- பணத்தை மோசடி செய்தவர் கைது - சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு என செய்தி வந்துள்ளது. அதனை நம்பி மேற்படி பெண் அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேடடிங்ஸ் மற்றும் ரிவியூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு லிங்க அனுப்பியுள்ளனர். அந்த லிங்க் மூலம் மேற்படி பெண் ரேடடிங்ஸ் கொடுத்து முதலில் ரூபாய் 3670/- பணத்தை பெற்றுள்ளார். பின்னர் மேற்படி மர்ம நபர் ஆன்லைன் டிரேடிங் மூலமும் அதிக லாபம் பெறலாம் என மேற்படி பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி மற்றொரு லிங்க் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் வந்த இணையள பக்கத்தில் மொத்தம் ரூபாய் 5,90,830/- பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இதனையடுத்து மேற்படி பெண் லாபம் வரவில்லை என்று அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் கூடுதலாக பணத்தை கட்டினால்தான் முதலீடு மற்றும் அதற்கான லாப பணத்தை எடுக்க முடியும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி பெண் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. சகாய ஜோஸ் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கன்னியாகுமரி திருப்பரப்பு பள்ளிமுக்கு பகுதியைச் சேர்ந்த மணி மகன் மகேஷ் (37) என்பவர் மேற்படி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி சைபர் குற்றப்பிரிவு போலீசார் மேற்படி எதிரி மகேஷ் என்பவரை நேற்று (24.05.2025) கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.