விளாத்திகுளம் அருகே 466 ஆண்டுகள் பழமை வாய்ந்த "புனித மோட்ச இராக்கினி மாதா ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றம் : திரளான மக்கள் பங்கேற்பு!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார்  கிராமத்தில் 466 ஆண்டுகள் பழமை வாய்ந்த "புனித மோட்ச இராக்கினி மாதா" திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் முதன்மை கடவுளாக புனித மோட்ச இராக்கினி மாதா அருள்பாலிக்கிறார். முந்தைய காலங்களில் மக்கள் மோட்சம் அடைவதற்கு உதவி புரிந்த சிறப்பை பெற்றதினால், இக்கடவுள் புனித மோட்ச இராக்கினி மாதா என அழைக்கப்படுவதாக இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய பெருவிழாவானது ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் சிறப்பு திருப்பலி பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு 10-ம் நாளன்று புனித மோட்ச இராக்கினி மாதாவின் தேர்பவனியுடன் ஆலய பெருவிழாவானது வெகு விமர்சையாக  திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, முதல் நாளான  ஆலயத்தில் உள்ள  அன்னைக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு, ஆலயத்திலுள்ள கொடிமரத்தில் கொடியேற்றவிருக்கும் திருக்கொடி மற்றும் அன்னையின் கிரீடத்தை கிராமம் முழுவதும் வானவேடிக்கை, மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று கொடிஊர்வலம் நடத்தப்பட்டப் பின்னர் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள்செய்யப்பட்டு கொடியேற்றம் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் மலர் மாலைகள், வாழைத்தார், பால் உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தினர். மேலும் ஆண்டுதோறும் உலகப்புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் திருவிழா முடிந்து அங்குள்ள கொடியினை இறக்கிய பின்னர், இத்திருத்தலத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறும் தனிச்சிறப்பாக  கருதப்படுகிறது என கிராம மக்கள் தெரிவித்தனர்.