கோழி திருடர்களை கூட கண்டுபிடிக்க முடியாத விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை : தொடர் திருட்டுக்கு காவல்துறைதான் காரணம் : எஸ்.ஐ மீது மாவட்ட எஸ்.பி-யிடம் பரபரப்பு புகார்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தைச் சேர்ந்த இராமையா நாடார் என்பவரின் மகன் பால்ராஜ்(48). முதுகலை பட்டதாரியான இவர் தனக்கு சொந்தமான இடத்தில் "இந்திரா கோழி பண்ணை" என்ற பெயரில் கோழிப்பண்ணை அமைத்து அதில் வான்கோழி, வாத்து, நாட்டுக்கோழி மற்றும் சேவல்களை கடந்த பத்து மாதத்திற்கும் மேலாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கோழிப்பண்ணையில் சில வான்கோழிகள் மற்றும் கோழிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்‌. இது குறித்து பால்ராஜ் சூரங்குடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து தனக்கு சந்தேகமான நபர்கள் பற்றியும் கூறியுள்ளார். ஆனால் அதை கண்டு கொள்ளாத காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்போது மீண்டும் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இவரது கோழி பண்ணையில் சுமார் ரூ.1 லட்சம் மதிக்கத்தக்க ஏராளமான வான்கோழிகள், வாத்துக்கள் மற்றும் நாட்டுக்கோழிகள் உள்ளிட்டவற்றை கம்பி வேலியைத் தாண்டி பண்ணைக்குள் புகுந்து மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுபற்றியும் கோழிப்பண்ணை உரிமையாளர் பால்ராஜ், சூரங்குடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த போது அதனை வாங்க மறுத்ததால்... பால்ராஜ் சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து மீது தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு நேரடியாக சென்று தன்னுடைய புகாரை பெற்றுக் கொள்ளவில்லை என எஸ்.ஐ மீது புகார் அளித்தது மட்டுமின்றி தன்னுடைய கோழிப்பண்ணையில் கோழிகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனை கோழிப்பண்ணை உரிமையாளர் பால்ராஜ் புகாரை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும், விளாத்திகுளம் பகுதிகளில் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பற்றாக்குறை காரணமாக இப்பகுதியில் ஏராளமான கோவில்கள் மற்றும் வீடுகளில் நகை, பணம் திருட்டு வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருக்கும் நிலையில், தற்போது கோழி திருடர்களை கூட காவல்துறையினர் கண்டுபிடிக்காததன் காரணமாக தனது பண்ணையில் மீண்டும் திருட்டுப் போயுள்ளது இதற்கு காவல்துறை தான் காரணம் என்று கோழிப்பண்ணை உரிமையாளர் பால்ராஜ் குற்றச்சாட்டு வைத்துள்ளது மட்டுமின்றி எஸ்.ஐ மீது மாவட்ட எஸ்.பி-யிடம்  எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.