கோவில்பட்டி அருகே புள்ளிமான் கறி சமைத்து சாப்பிட்ட ஒருவர் கைது - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு- புள்ளிமானின் நான்கு கால்கள் மற்றும் கார் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலையை சுற்றியுள்ள கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வேட்டை நாய்களை பயன்படுத்தி சில முக்கிய புள்ளிகள் முயல்களையும், மான்களையும், மயில்களையும் வேட்டையாடி சமைத்து விருந்து நடத்தி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் சென்றது. தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், கோவில்பட்டி வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர் பிரசன்னா, வனக்காப்பாளர் பொன் முனியசாமி, பேச்சிமுத்து ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் குருமலை, ஊத்துப்பட்டி, பாறைப்பட்டி, கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கடம்பூர் அடுத்துள்ள கொத்தாளி கிராமத்தில் 17 ஆம் தேதி இரவு ரியல் எஸ்டேட் அதிபர் முத்துப்பாண்டி தோட்டத்தில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது புள்ளி மானின் நான்கு கால்களை அங்கிருந்து கைப்பற்றினர். இதையடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாய் கடித்து இறந்து கிடந்த புள்ளிமான எடுத்துச் சென்று கறி வைத்து சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் பன்னீர் குளம் முத்துப்பாண்டியை கைது செய்த வனத்துறையினர் அவரை கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். முத்துப்பாண்டி பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.மேலும், முத்துப்பாண்டிக்கு உடந்தையாக இருந்த திருநெல்வேலி மாவட்டம் குறிச்சிகுளத்தை சேர்ந்த சுடலைமணி என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.