கோவில்பட்டியில் ரயிலில் ஏற முயன்றவர் நடைமேடை - ரயிலுக்கு இடையில் சிக்கி பரிதவிப்பு -சிக்கிக் கொண்டவர் நடைமேடையை உடைத்து மீட்பு!




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர்  வீர பிரசாத் (28). இவர் திருவாரூரில் உள்ள கூட்டுறவு சொசைட்டில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். இன்று வீர பிரசாத் தனது மனைவி பிருந்தா மற்றும் ஒன்றை வயது ஆண் குழந்தையுடன் திருவாரூர் செல்வதற்காக கோவில்பட்டி ரயில்வே நிலையத்துக்கு வந்துள்ளார். சென்னை தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் மூலமாக விருதுநகருக்கு சென்று, அங்கிருந்து சென்னை செங்கோட்டை செல்லும் ரயில் திருவாரூருக்கு வீர பிரசாத் செல்ல இருந்துள்ளார்.வழக்கமாக வரும் நேரத்தை விட 15 நிமிடம் தாமதமாக  அந்தியோதயா ரெயில் கோவில்பட்டி ரயில் நிலையம்2வது நடைமேடையில்  வந்து கொண்டு இருக்கும்போது நிற்பதற்குள் . அதில் வீர பிரசாத்  ஏற முயன்றுள்ளார். அப்போது கால் தவறி நடைமேடைக்கும்  ரயிலுக்கு இடையில் சிக்கி கொண்டார்.


நல்வாய்ப்பாக ரயில் நின்றதால் பெரும் விபத்து ஏற்படவில்லை. சிக்கி கொண்டவரால் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டு பரிதவித்தார். இதையடுத்து நடை மேடையை இயந்திரம் மூலமாக உடைத்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வீர பிரசாத் மீட்கப்பட்டார். இதில் அவருக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்தியோதயா ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. இந்த சம்பவம் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.