நிலக்கடலை விலை கிடுகிடுவென உயர்வு - கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையை 40 சதவீதம் உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!
இன்று முதல் 40% விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல்!
கடலை மிட்டாய் என்றாலே அது கோவில்பட்டி தான். சந்தையில் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்று தனி மவுசு உண்டு..அதிலும் புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பின்னர் வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் என கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர்கள் குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதில் நேரடியாக மற்றும் மறைமுகமாக என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கடலை மிட்டாய்க்கு மிகவும் முக்கியமான மூலப்பொருள் நிலக்கடலை தான். சமீபகாலமாக நிலக்கடலையின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ. 8000 விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது 6500 ரூபாய் உயர்ந்து14500 ரூபாயாக விற்பனை ஆவதால் கடலை மிட்டாய் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.
இதனை சமாளிக்கும் வகையில் கடலை மிட்டாய் விலையை 40% உயர்த்த கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது இதில் விலையை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு கிலோ கடலை மிட்டாய் ஒரு கிலோ ரூ. 160 முதல் 180 என மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் 40 சதவீத உயர்வினால் இனி ரூ. 220 வரை விற்பனை செய்யப்படும்.
அதேபோன்று சில்லறை தற்போது ஒரு கிலோ கடலை மிட்டாய் 200 முதல் ரூ. 220 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் 40% உயர்வினால் ஒரு கிலோ ரூ. 260வரை விற்பனை செய்யப்படும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலையேற்றம் குறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் நிலக்கடலையின் விலை ஏற்றம் காரணமாக கடலை மிட்டாய் விலையை 40% உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும். நிலக்கடலை உற்பத்தி குறைவு காரணமாகத்தான் அதன் விலை உயர்ந்துள்ளது. எனவே நிலக்கடலை உற்பத்தியை விவசாயிகள் அதிக அளவு செய்யும் வகையில் தமிழக அரசு அவர்களை ஊக்குவித்து மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலக்கடலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். நம்முடைய தேவைக்கு போக இருப்பதை மட்டும் ஏற்றுமதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தான் புவிசார் குறியீடு கிடைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஊர்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் பெயரை பயன்படுத்தி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.