ACCIDENT ZONE : ரோடா சார்.... இது? : காவு வாங்கும் சாலையை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!      தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையில், படர்ந்தபுளி கிராமத்தின் அருகில் சாலை முற்றிலும் பெயர்ந்து பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. இத்தகைய மிக மோசமான சாலையில் பகலில் வாகனங்களை ஓட்டிச் செல்வதே மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் நிலையில், மின் விளக்குகள் இன்றி காணப்படும் அப்பகுதியில் இரவில் சாலையை கடந்து செல்வதென்பது கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு ஆபத்தான சூழ்நிலையில்தான் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த படுமோசமான சாலையில், நாளொன்றுக்கே ஏராளமான வாகன விபத்துக்கள் ஏற்படுவதில் கை, கால் முறிவு, உயிர் பலி என தொடர்ந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வரும் சூழ்நிலையில், இதனை சரிசெய்ய ஆட்சியாளர்களும் முன்வரவில்லை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியபோக்கிற்கும் குறைவில்லை என்ற நிலைதான் நீடித்து வருகிறது...   

அதிகப்படியான விபத்துக்களுக்கு காரணமாக இருந்துவரும் இந்த சேதமடைந்த ஆபத்தான சாலையை சற்றும் கால தாமதபடுத்தாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பு கருதி உடனடியாக சாலையை சீரமைப்பு செய்வதோடு மட்டுமின்றி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி அங்கு "விபத்து பகுதி" என எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. (இனியும்....கூட  அதிகாரிகள் அவர்களது வழக்கமான அலட்சியப்போக்கையே கையாண்டால், இச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி பல உயிர்கள் அனாமத்தாக போகும் மிகமோசமான நிலை தொடரத்தான் போகிறது... என்பதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி IAS கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கைக்கு துறைசார்ந்த அதிகாரிகளை முடுக்கி விட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.)