விளாத்திகுளத்தில் கோலாகலமாக நடைபெற்ற யோகீஸ்வரர் சமுதாய குடும்ப விழா..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார யோகீஸ்வரர் சமுதாய மக்கள் நலச்சங்கத்தின் சார்பில், இன்று(21.12.2025) விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் மாபெரும் குடும்ப விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து யோகீஸ்வரர் சமுதாய மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் செண்டை மேளம் முழங்க... பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் நடனத்துடன் ஊர்வலமாக திருமண மஹாலிற்கு சென்று குடும்ப விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவிற்கு விளாத்திகுளம் வட்டார யோகீஸ்வரர் சமுதாய மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் கணேசன் மற்றும் கிளைத்தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை வகித்தனர்.
பின் இவ்விழாவில் சமுதாய சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டு, நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இதில் சிறப்புரையாற்றிய நிர்வாகிகள், பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் நன்முறையில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று அறிவுரைகள் கூறி, மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் யோகீஸ்வரர் சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் 2026-ம் ஆண்டிற்கான காலண்டரை சமுதாய மக்கள் அனைவருக்கும் வழங்கி சிறப்பித்தனர். இறுதியாக விழாவில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் சமுதாய மக்கள் அனைவரும் கலந்து கொண்டு உணவருந்திச்சென்றனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு யோகேஸ்வரர் மாநில சமுதாய பேரவைத் தலைவர் இராஜகோபால், மாநில செயல் தலைவர் இராஜமுருகன், மாநில பொதுச் செயலாளர் நிர்வாக செயலாளர் சுப்ரமணியன், மாநில பொருளாளர் சுரேஷ், மாநில சட்ட ஆலோசகர் பிச்சாண்டி, விளாத்திகுளம் கௌரவ ஆலோசகர் கணேசன், கிளைச்செயலாளர் செல்வம், சிறப்பு அழைப்பாளர்களாக சண்முகையா (அ.இ.வானொலி- நாகர்கோவில்), ஆந்திர மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மதுரை மாவட்ட தலைவர் கண்ணன், விளாத்திகுளம் துணைத் தலைவர் உமையராஜ், பொருளாளர் அய்யம்பெருமாள் உள்ளிட்ட ஏராளமான சங்க நிர்வாகிகள், இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் கிளை இளைஞர் அணி தலைவர் கரண் மற்றும் செயலாளர் செண்பகராஜ் செய்திருந்தனர்.