மணியார்டர் மூலம் மகளிர் உரிமைத்தொகை - கோவில்பட்டியில் பெண்கள் மகிழ்ச்சி - வீட்டிற்கே சென்று ரூ.1000 விநியோகம் செய்த தபால்துறை! தமிழக அரசு சார்பில் கடந்த 15ந்தேதி குடும்பத்தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை தொடங்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ரூ 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் பணம் கிடைக்கப்பெறதாவர்கள் அதற்கு என்று அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து, தகுதி இருப்பின் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் கடந்த 3 நாள்களாக பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் பல பெண்களுக்கு  நேற்று முதல் திடீரென தபால்துறை மணியார்டர் மூலமாக மகளிர் உரிமைத்தொகை ரூ.1000ம் வந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் பலர் தங்களது வங்கி கணக்கில் ஆதார் இணைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. கடந்த 3நாள்களாக தகுதி இருந்தும் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் ஆனால் இன்றைக்கு தபால் துறை மூலமாக ரூ.1000 தங்களுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.மணியார்டர் மூலமாக வந்த பெண்களின் ஆதார் அட்டை நகலை பெற்றுக்கொண்டு தபால்துறையினர் ரூ 1000 வழங்கி வருகின்றனர்.