தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட பூசனூர் கிராம பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் அரசு புறம்போக்கு நீர்வரத்து கால்வாயிலும், வண்டிப்பாதையிலும் ஏராளமான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆபத்தான முறையில் மின்கம்பங்கள் அமைக்கப்படுவதைக் கண்ட கிராம மக்கள் ஏற்கனவே மின்கம்பங்கள் அமைப்பதை நிறுத்தக்கோரி பலமுறை கூறியும் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் தொடர்ந்து அராஜகப்போக்கில் நீர்வரத்து கால்வாய், ஓடை மற்றும் வண்டி பாதை பகுதிகளில் அமைத்து வருகின்றனர். இதையடுத்து கிராம மக்கள் விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றாலை நிறுவனத்தின் அராஜாகப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்தி நீர்வரத்து கால்வாயில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் தொடர்ந்து மின்கம்பங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டித்து பூசனூர் கிராம மக்கள் இன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் தங்களது கோரிக்கையை ஏற்று தங்களது கிராமத்தில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்கமங்களை உடனடியாக அகற்றாவிட்டால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்றனர்.