தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பிலோடையில் இயங்கி வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி ஆண்டு விழா உட்பட முப்பெரும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா, ஆட்டம் - பாட்டம் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி முப்பெரும் விழாவில் தனது பள்ளிக்கால அனுபவங்களை மாணவர்களிடம் கூறி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அதுமட்டுமின்றி பெற்றோர்களிடம் தங்களது குழந்தைகள் முதல் மதிப்பெண் பெறவில்லையென்றால் அவர்களை கடிந்து கொள்ளாமல் ஊக்கமளித்து படிப்பதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் பள்ளியின் விளையாட்டு விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும், கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவித்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வெகு சிறப்பாக நடைபெற்ற இப்பள்ளியின் முப்பெரும் விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயபிரகாஷ் ராஜன், ஒரு இணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் முனியசாமி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளின் உற்சாக நடனத்தை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.