விளாத்திகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது - சுமார் 105 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாராயணன் மற்றும் போலீசார் இன்று (17.04.2026) விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருசம்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான மாரிமுத்து (38), ராஜ் (28) மற்றும் குளத்துரைச்  சேர்ந்த சுரேந்திரன் (32) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.


உடனடியாக மேற்படி போலீசார் எதிரிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 105 கிலோ 650 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.