விளாத்திகுளம் அருகே சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களால் பொதுமக்கள் அவதி!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூதலாபுரம் கிராமத்திலிருந்து சேர்வைக்காரன்பட்டி  கிராமம் வரை சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் வனம் போல் ஆக்கிரமித்துள்ளது, இந்தசாலை வழியாகத்தான் புதுசின்னையாபுரம்,P.ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம், சேர்வைக்காரன்பட்டி, சங்கரப்ப நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு தினந்தோறும் தனியார் கல்லூரி வாகனங்கள்,பள்ளிவாகனங்கள், தொழிலாளர்வாகனங்கள் சென்று வருகின்றது.


அதேபோல் இப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அதிகம் பயணிக்கக்கூடிய இந்த சாலையின் இருபுறமும் அதிக சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால்,வாகனங்கள் எதிரெதிரே ஒன்றுடன் ஒன்று விலக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.


அதேபோல் சங்கரநாயக்கன்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இப்பகுதி மக்கள் வருகின்ற 07-04-2025 திங்கள்கிழமை காலை புதூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.