புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் களை கட்டிய பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 7 கோடி ரூபாய் வரை வியாபாரம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும். சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்கவியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடிவரை விற்பனை நடைபெறும்.
ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில்ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும்.
இந்நிலையில் வரும் செவ்வாய் கிழமை பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்ந்தை களைகட்டியுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை அதிகாலை தொடங்கும் ஆட்டுச்சந்தை நேற்று மாலை முதல் தொடங்கி ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக இறைச்சிக்காக கிடாய்கள் விற்பனை அதிகமாக இருந்தது.
கடந்த ஆண்டை விட ஆடுகள் விலை அதிகரித்து இருந்தது. உதாரணமாக கடந்த ஆண்டு 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் விற்பனையான ஆடு இந்தாண்டு 25 ஆயிரம் விற்பனையானது
600 முதல் 700 ரூபாய் வரை விற்பனையான பச்சிளம் ஆண்டு குட்டிகள் கூட 1000 முதல் 1300 வரை விற்பனையானது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் கடந்த ஆண்டை விட ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது மட்டுமின்றி, விலையும் அதிகமாக உயர்ந்து இருந்தது. விற்பனையும் நன்றாக இருந்து. 7 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்