விளாத்திகுளத்தில் மனைவியை வெட்டி கொன்ற கணவன் : போலீஸ் விசாரணை!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (45) என்பவர் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி அம்பிகாவதி(40) ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் என 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே நடத்தை சந்தேகத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலையில் மீண்டும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாவதியை அவரது கணவர் லட்சுமணன் அரிவாளால் கழுத்து மற்றும் முகத்தில் வெட்டியதில் அம்பிகாவதி அவர்களது வீட்டின் முன்பே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த  விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அம்பிகாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் அம்பிகாபதியை கொலை செய்த கணவர் லட்சுமணன், அம்பிகாபதியை கொலை செய்துவிட்டு விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.