வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ECR சாலை 15 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் : NHAI அதிகாரிகளுடன் ஆய்வு செய்தப்பின் விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் பேட்டி! தூத்துக்குடி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் மிக நீண்ட தூரம் கொண்ட கிழக்கு கடற்கரை சாலையில்(ECR) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அமைந்துள்ள வேப்பிலோடையில் அதிவேகத்தில் கரைபுரண்டோடிய காட்டாற்று வெள்ளத்தினால் ECR சாலை இருந்த தடமே தெரியாமல் அடித்துச் சென்றதில், கிட்டத்தட்ட 300 மீட்டர் அளவிலான சாலை சிறுசிறு துண்டுகளாக நொறுங்கி காணப்பட்டது. இதனால் இந்த ECR சாலையின் போக்குவரத்து துண்டிப்பு காரணமாக கன்னியாகுமரி, இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உட்பட பல வெளிமாநில வாகனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் முதல் தொழில் நிறுவனங்கள் சரக்கு வாகனங்கள் வரை அனைத்தும் தற்போது பல கிலோமீட்டர் சுற்றி விளாத்திகுளம் வழியாக சென்று வருகின்றனர்.

 இந்த நிலையில், இன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) திட்ட இயக்குநர் ராவுத், பொறியாளர் வீர இராஜேஷ்மணி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் என பலர் வேப்பிலோடை அருகே முற்றிலும் சேதம் அடைந்துள்ள ECR சாலையை பார்வையிட்ட ஆய்வு செய்தனர். மேலும் இந்த ECR சாலையை ஆய்வு செய்ய வந்திருந்த மத்திய அரசு அதிகாரிகளிடம், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இந்த சேதமடைந்த சாலையின் காரணமாக முடங்கியுள்ள போக்குவரத்து பாதிப்பை எடுத்துரைத்து மிக விரைவில் சாலையை சரி செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய MLA மார்க்கண்டேயன்,இந்த ECR சாலை மாநில அரசிடமிருந்து இந்திய தேசிய ஆணையத்துக்கு(NHAI) ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது திட்ட இயக்குநருடன் சேர்ந்து இந்த சேதமடைந்த ECR சாலையில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இன்றைய தினமே இந்த சாலையும், பட்டின மருதூர் அருகிலும் ECR  சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 15 நாட்களுக்குள் சாலை முழுமையாக முடித்து போக்குவரத்துக்கு வழி வகையை செய்யப்படும்... அத்தோடு தொகுதி முழுவதிலும் உள்ள மாநில அரசு சாலைகள், மாவட்ட சாலைகள், கிராம சாலைகள் என அனைத்து சாலைகளும் இன்றைய தினம் பணிகளை முடித்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மானாவாரி பயிர்களுக்கு ரூ.8500 நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், விளாத்திகுளம் போதி மக்களின் கோரிக்கையை ஏற்று முதல்வரிடம், ரூ.8500-ஐ ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்து பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதி எடுத்தார்..