2-ம் இராமேஸ்வரம் என்றழைக்கப்படும் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற தீர்த்தக்கரையான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிக்குளம் தீர்த்தக்கரையில், ஆண்டுதோறும் தை அமாவாசை, அடி அமாவாசை போன்ற முக்கிய தினங்களில் விளாத்திகுளம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இப்பகுதிகளில் இறந்த நபர்களின் அஸ்தியையும் இங்குள்ள கடலில் கரைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதுபோன்று அஸ்தியை கரைக்க வரும் நபர்களும், முக்கிய அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வருபவர்களும் இங்குள்ள கடலில் புனித நீராடி அருகே உள்ள கீழ வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து செல்வர். இவ்வாறு சிப்பிக்குளம் தீர்த்தக்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை வசதி, உடைமாற்றும் அறை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் பல்வேறு பகுதிகளில் இருந்து தர்ப்பணம் செய்ய வருகின்ற பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் 15-வது நிதிக்குழுவின் கீழ், ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து சிப்பிக்குளம் தீர்த்தக்கரையில் கழிப்பறையுடன் கூடிய உடைமாற்றும் அறை கட்டும் பணிக்கு ஒப்பந்தமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டதையடுத்து பொதுமக்கள் யூனியன் சேர்மன், ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியடைந்தனர்.