எட்டையாபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் இடையே ஜாதி சண்டையா !

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தேவேந்திரகுல வகுப்பைச் சேர்ந்தவர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் மகாலட்சுமி.

 

 இந்நிலையில் பள்ளி தலைமையாசிரியர் மகாலட்சுமி,ஜாதி ரீதியாக செயல்படுவது மட்டுமின்றி, தன்னை பணி செய்ய விடாமல் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து, தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும், பள்ளியில் ஆசிரியர் வருகை பதிவேட்டினை மறைத்து வைத்துக் கொண்டு தன்னை கையெழுத்து போடவிடாமல் தடுத்து வருவதாகவும், தான் பாடம் எடுக்கும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாகவும் ஆசிரியை உஷா குற்றம் சாட்டியுள்ளது மட்டுமின்றி,இது தொடர்பாக கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்துள்ளார்.ஏற்கனவே விளாத்திகுளம் அருகே உள்ள  செங்கோட்டை அரசு பள்ளியில் தலைமையாசிரியை மகாலட்சுமி மற்றும் ஆசிரியர் உஷா இருவரும் பணிபுரிந்த போது பிரச்சனை ஏற்பட்டு, இது தொடர்பாக ஆசிரியை உஷா புகார் அளித்து, விசாரணையும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

 தலைமை ஆசிரியை மகாலட்சுமி தனக்கு தொடர்ந்து நெருக்கடி தருவதால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளது மட்டுமின்றி, தன்னால் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக ஆசிரியை உஷா தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தலைமையாசிரியை மகாலட்சுமியிடம் கேட்டபோது இதனை மறுத்ததாக கூறப்படுகிறது.

 ஜாதிய பாகுபாடு இல்லாமல் மாணவ மாணவிகள் பழக வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் ஆசிரியர்கள் மத்தியில், சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழக்கமிட்ட  முண்டாசுக் கவிஞன் பாரதியாரின் சொந்த ஊரான எட்டையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  ஆசிரியர்களே ஜாதிச் சண்டை போடுவது பெரும் வருத்தத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.