இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு அதன் செயல்முறை விளக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம்.வெங்கடேசபுரம் மற்றும் வள்ளிநாயகிபுரம் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அந்தந்த கிராமங்களுக்கே விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட "விவிபேட்" இயந்திரத்தில் நாம் செலுத்திய வாக்கினை எந்த சின்னத்திற்கு அளித்துள்ளோம் என்பதை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்தும், மாதிரி வாக்கு பதிவு பொருத்தம் காணொளி காட்சியின் வாயிலாகவும், தேர்தல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் மூலமாவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது வாக்கினை செலுத்தி "விவிபேட்" இயந்திரத்தின் செயல்பாடு குறித்து நன்கு தெரிந்து கொண்டனர்.  இந்த விழிப்புணர்வு மற்றும் மாதிரி வாக்கு பதிவு நிகழ்ச்சியில், விளாத்திகுளம் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம உதவியாளர் சுபலட்சுமி மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.