விளாத்திகுளம் விவேகானந்தா வித்தியாலயா பள்ளியில், "விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு" நிகழ்ச்சி நடைபெற்றது. தீபாவளி பண்டிகை வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பிற கல்விசார் நிலையங்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு "விபத்தில்லா தீபாவளி" என்ற தலைப்பில் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் பள்ளியான விவேகானந்தா வித்தியாலயா மழலையர் பள்ளியில் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் இராஜேந்திரன் தலைமையில், "விபத்தில்லா தீபாவளி" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி தினத்தன்று  பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது பற்றியும், பட்டாசுகள் வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு போன் செய்து தெரிவிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.