விளாத்திகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் : வெற்றியாளர்களுக்கு LED TV, மிக்ஸி, பேன் பரிசுகள் : போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்த கனிமொழி எம்பி!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று மாலை மாபெரும் பூஞ்சிட்டு மாட்டுவண்டி, நடைபெற்ற நிலையில் இன்று நடுமாடு, சின்ன மாடு என மாட்டு வண்டி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.நடுமாடு போட்டியில் 12 ஜோடி மாடுகள், சின்ன மாட்டு வண்டி போட்டியில் 30 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
போட்டிகளை திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் பகுதியில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகளை மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் நீண்ட தூரம் சாலையின் இருபுறமும் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு களித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பொன்னாடை போர்த்தி பரிசுத்தொகை மற்றும் LED TV, மிக்ஸி, பேன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.