"பிரதமர் என்னதான் 'ROAD SHOW' நடத்தினாலும் ஓட்டு நோட்டாவுக்கு கீழ தான்.." - கனிமொழி சாடல்! 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் இன்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதையொட்டி வேம்பாரில் கட்சியினரால் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.இதில் காவாலயா.., மஸ்காரா.. என பல்வேறு சினிமா பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள்‌ மேடையில் ஆட்டம் போட... கட்சித் தொண்டர்களோ கட்சிக்கொடியைப் பிடித்தபடி ரோட்டில் நின்று குத்தாட்டம் போட்டனர். இதற்கிடையில் கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்று வேடமடைந்து கலைஞர்கள் மேடையில் ஏறியவுடன் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மலர்கள் தூவி உற்சாக கைகளைத்தட்டி  உற்சாகமடைந்தனர்.

மேலும் பிரச்சாரக் கூட்டத்திற்கு கனிமொழி தாமதமாக வந்தும் கூட... சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு கலைஞர்களை கண்ணிமைக்காமல் கண்ட கூட்டம் அப்படியே கலையாமல் நின்றது.இதைத்தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி திமுக பாராளுமன்ற வேட்பாளருமான கனிமொழி, தூத்துக்குடி மாவட்டத்தில் எல்லையில் அமைந்துள்ள வேம்பார் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அப்போது அங்கிருந்த வேம்பார் சோதனைச்சாவடியில் தேர்தலையொட்டி வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த  விளாத்திகுளம் உட்கோட்டத்தைச் சேர்ந்த போலீசார் கனிமொழி பிரச்சாரத்திற்காக வந்த திமுகவினர் வாகனங்களை மட்டும் முழுமையாக சோதனை செய்யாமல் பெயரளவிற்கு பார்த்துவிட்டும், அதிலும் கனிமொழியின் பிரச்சாரம் செய்துவரும் வாகனத்தை சோதனையே செய்யாமலும் அனுப்பி வைத்தனர்.பின்னர், வேம்பாரில் பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் கனிமொழி;

* தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிரித்து மக்களுக்கிடையே பிரச்சனைகள், கலவரங்களை உருவாக்கி ஓட்டு வாங்கி அதே பதவியில் அமர வேண்டும் என்பதற்காக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள் அவர்கள் (பாஜக)

** வெள்ளத்திற்கெல்லாம் வராத பிரதமர் இப்போது அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்... இன்றைக்கு கூட சென்னையில் ROAD SHOW நடத்திக் கொண்டிருக்கிறாராம், எல்லாவற்றையும் நடத்தலாம் ஆனால் ஓட்டு நோட்டாவுக்கு கீழதான்...

* இந்த தேர்தல் 2-வது சுதந்திரப் போராட்டம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* தூத்துக்குடி எனது 2-வது தாய் வீடு என்று சொல்லக்கூடிய அளவிற்கு உங்களது அன்பை பெற்றுள்ளவளாக உள்ளேன்... அந்த உரிமையிலே நான் கேட்கிறேன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் உங்களுடன் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...