எட்டயபுரத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திட உறுதியேற்ற இளம் பாரதிகள்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நாட்டின் விடுதலைக்கு தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியின் நினைவு தினம் பாரதியார் மணிமண்டபத்தில் கடைபிடிக்கப்பட்டது. தமிழ் பாப்திஸ்துபள்ளி, மாரியப்பன் நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் பாரதியார் வேடம் அணிந்து எட்டையாபுரம் பாரதியார் நினைவு மணிமண்டபத்தின் முன்பு பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும்,குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவும்,பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சரியான உணவு பழக்கங்களை மேற்கொண்டு, புற்றுநோயை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும். சுற்றுச்சூழலை பாதுகாத்து பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும்,நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் மகாகவி பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இளம் பாரதிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.