தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மந்திகுளம் கிராமத்தில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தராததால் அப்பகுதியை சேர்ந்த மக்கள்,மேடு பள்ளங்களாக காணப்படும் சிறிய பாதை வழியாக தான் சடலத்தை கொண்டு சென்று நல்லடக்கம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் இப்பாதையை கடந்து மயானத்திற்கு செல்வதென்பது அக்கிராம மக்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.  இந்த நிலையில், கிராமத்தைச் சேர்ந்த 85 வயது முதியவரான தாசில் செட்டியார் என்பவர் வயோதிகம் காரணமாக இயற்கை எய்தினார். அவரது சடலத்தை உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் இன்று மாலை நல்லடக்கம் செய்வதற்காக அக்கிராமத்திலுள்ள மயானத்திற்கு ரத வாகனத்தின் மூலம் கொண்டு சென்றனர். அப்போது மயானத்திற்கு செல்வதற்கு மந்திகுளம் ஊராட்சியின் சார்பில் தற்போது வரை முறையான பாதை வசதி ஏற்படுத்தி தராததால் சேறும் சகதியுமாக சூழ்ந்து காணப்பட்ட நடப்பதற்கே லாயக்கற்ற மோசமான பாதையில் சடலத்தை மிகவும் ஆபத்தான முறையில் உறவினர்கள் கொண்டு சென்றனர். அவ்வாறு சடலத்தை செல்லும் பாதையில், பள்ளங்கள் மற்றும் சேற்றில் ரத வாகனம் சிக்கிய போது உறவினர்களும், கிராமத்தினரும் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்கு மத்தியில்தான் ரத வாகனத்தை மயானத்திற்கு தள்ளி செல்கின்றனர். குறிப்பாக ஒரு சடலத்தை அடக்கம் செய்யச் செல்வதற்கு பல உயிர்களை பணயம் வைத்து தான் செல்ல வேண்டிய மிகவும் அசாதாரண சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் லேசான மழைக்கே மயானத்திற்கு செல்வதற்கு இவ்வளவு சிரமமென்றால்..... அதிகப்படியான மழைக்காலங்களில் இக்கிராம மக்கள் மயானத்திற்கு செல்வதை கற்பனை செய்ய முடியாத நிலையில்தான் உள்ளது மந்திக்குளம் கிராமத்தின் மயானத்தின பாதை. ஆகையால்,  உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இக்கிராம மக்களின் சிரமத்தை உணர்ந்து மயானத்திற்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.