கிராமத்தில்  கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பல்வேறு கிராமப்புற சாலைகள் மற்றும் பாலங்கள் காட்டாற்று வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாக ஏராளமான கிராமப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக எட்டையபுரம் தாலுகா தோழ்மலைப்பட்டி கிராமத்தில் தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தினால் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் கடந்த 7 நாள்களாக தோழ்மலைப்பட்டியிலிருந்து, கோவில்பட்டி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக தோழ்மலைப்பட்டி, கருப்பூர், அருணாச்சலபுரம், கடலையூர் முத்தலாபுரம், மலைப்பட்டி போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக  அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத அசாதாரண சூழ்நிலைதான் இன்றளவும் நிலவி வருகிறது. ஆகையால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்தினர் இச்சாலையை சரிசெய்து மக்கள் வழக்கமான போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பாக சமூக ஆர்வலர் ராஜகுமார் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.