விளாத்திகுளத்தில், மீனாட்சியம்மனுக்கு கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் : ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு புதுத்தாலி மாற்றிக் கொண்டனர்!மதுரைக்கு அடுத்தபடியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளி அருள் பாலிக்கும் விசேஷமான தலமாக விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகிறது. அவ்வாறு விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், மதுரை மீனாட்சி திருக்கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களும் வைபவங்களும் இக்கோவிலில் நடைபெறும் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அதன்படி விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழாவானது கடந்த ஏப்ரல 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் மற்றும் சுந்தரேஸ்வரர் பலவகையான வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த பிரசித்தி பெற்ற சித்திரை தேர் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக 9-ம் நாளில் நடைபெறும் அம்பாளின் திருக்கல்யாணம் மற்றும் 10-ம் நாளில் நடைபெறும் தேர் பவனித் திருவிழா உள்ளிட்டவை கருதப்படுகிறது. இதனையொட்டி இன்று நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாண வைபவத்தில் விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் திரளாக கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்தனர். பின்னர் இதில் திருமணமான பெண்கள் மீனாட்சி அம்மனை வழிபட்டு புதுத் தாலிகளை மாற்றிக் கொண்டனர். சுவாமி அம்பாளின் திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. மிகவும் விசேஷமாக கருதப்படும் இந்த திருக்கல்யாணத்தை காண்பதற்காக  ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து சென்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.