தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூரங்குடி ஊராட்சியில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜக்கனி என்பவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டதால், அவரின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சூரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேல்த்தாய், ராஜக்கனி குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்த தெருக்குழாயை அறுத்து குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளார். ஏன் குழாயை அறுக்கிறீர்கள்? என்று  ராஜக்கனி கேட்டதற்கு, அவரின் வீட்டின் முன்பு இருக்கும் தொட்டியை காரணமாக காட்டி தொட்டியை மூடினால் தான் குடிநீர் இணைப்பு வழங்குவோம் என்று மழுப்பலாக பதில் கூறி சென்றுள்ளனர். மேலும், ராஜக்கனி என்பவர் பயன்படுத்தி வந்த குடிநீர் இணைப்பை துண்டித்து ஒரு வருட காலம் ஆகியும் அவருக்கு குடிநீர் வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் விரோத போக்காக செயல்பட்டு வருவதாகவும் இதனால் குடிநீரை பணம் கொடுத்துதான் வாங்கி வருகிறேன் என்றும், இருப்பினும் இதுவரை ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தி வருகிறேன் எனவும் பாதிக்கப்பட்ட ராஜக்கனி கூறுகிறார். மேலும் தனக்கு துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை உடனடியாக சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நம்மிடம் வேதனை தெரிவிக்கிறார்.