என் இமெயிலுக்கு மெசேஜ் பண்ணு.. மரக்கன்று உன்னைத் தேடி வரும்... பெத்த பிள்ளையைப் போல மரத்தை வளர்க்கனும்" - மாணவர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விளாத்திகுளம் எம்.எல்.ஏ!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை மாணவ-மாணவிகள் இருபுறமும் வரிசையாக நின்று வெல்கம் க்ளாப் மூலம் உற்சாக வரவேற்பளித்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,‌ "என் இமெயில் ஜடி வாங்கிக் கொள்ளுங்கள்... உங்களுக்கு என்ன மரம் வேண்டும் என்று மெசேஜ் அனுப்பினால்...உங்களைத் தேடி மரக்கன்றுகள் வரும்" என்றும் "மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை பேணிகாத்து வளர்ப்பதைப்போல மரக்கன்றுகளை பெற்ற பிள்ளையைப் போல வளர்க்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு அன்பு கட்டளையிட்டார். மேலும், "விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை கருவேலி மரம் இல்லாத தொகுதியாக மாற்றுவதே என் கனவு" அதேபோன்று நீங்கள் வேம்பாரை கருவேலி மரம் இல்லாத வேம்பாராக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் "mlavkm2022@gmail.com"என்ற தன்னுடைய மின்னஞ்சல் முகவரியை மாணவர்களிடம் வழங்கி மரங்கள் வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார்.