நாட்டின் 14-வது தேசிய வாக்காளர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகம் சார்பில், "தேர்தல் விழிப்புணர்வு" எனும் தலைப்பில் திருநங்கைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது. விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் என பலர் கலந்து கொண்டு தங்களது கைவண்ணங்களை காட்டும் விதமாக... அழகான, வண்ணமயமான தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் போட்டு அசத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக திருநங்கைகள் கலந்து கொண்டு கோலம் போட அவர்களை சுற்றி பள்ளி மாணவிகள் நின்று உற்சாகப்படுத்த என்று கோலப்போட்டியே திருவிழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. இதைத்தொடர்ந்து அனைவரும் தேர்தல் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் (தேர்தல்) பாலமுருகன், விளாத்திகுளம் வருவாய் ஆய்வாளர் ராணி உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.