விளாத்திகுளம் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும்‌ மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, இராமசாமிபட்டி, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தி ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் தமிழ்நாடு அரசு விவசாய நிலங்களை அழிக்கும் இத்திட்டத்தை கைவிடாமலும், விவசாயிகளை உணர்வுகளை மதிக்காமலும் விவசாய நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. 


இந்த நிலையில் இன்று வெம்பூரில் 200க்கும் அதிகமான விவசாயிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் தங்களை கோரிக்கைகளாக; வருகின்ற 28.02.2025 அன்று சிப்காட் அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருப்பதால் அதுவரை தங்களது கிராமத்தில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைப்பதற்கான வேலையை நடத்தக்கூடாது என்றும், இப்போதைய சேர்ந்த விவசாயிகளின் நலன் கருதி இங்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க வேண்டாம் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் அரசு இந்த சிப்காட் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு இன்று வெம்பூர் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.