விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கரிமூட்டம் : ரூ.50 லட்சத்திற்கும் மேல் இழப்பு என தம்பதியினர் கண்ணீர்விட்டு கதறல் : உடனடியாக MLA சென்று ரூ.50 ஆயிரம் நிதியுதவி!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்(57) மற்றும் அவரது மனைவி குட்டியம்மாள் இருவரும் சேர்ந்து அதே கிராமத்தில் பல ஆண்டுகளாக கரிமூட்டம் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நகைகளை அடகு வைத்து, பணத்தை வட்டிக்கு வாங்கி அதிக முதலீடு செய்து விறகுகள், தூர் கட்டைகளை வாங்கி கடந்த சில மாதங்களாக கரிமூட்டம் அமைத்ததில், அவற்றையெல்லாம் விற்பனை செய்யவிருக்கும் நேரத்தில்.... அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் லட்சுமணனுக்குச் சொந்தமான 17 கரிமூட்டம் குவியல், உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள் உட்பட அனைத்தும் அவரது கண்முன்னே வெள்ளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்டது.இதனால் ரூ.55 லட்சம் மதிப்புள்ள கரிகளை இழந்துவிட்டோமே... என்று என்னசெய்வதென்று தெரியாமல் லட்சுமணனும், அவரது மனைவி குட்டியம்மாளும் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உடனடியாக இன்று காலை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அரசு அதிகாரிகளுடன் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த லட்சுமணன் - குட்டியம்மாள் தம்பதியினருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி... தமிழக அரசிடமிருந்து நிதி உதவி பெற்றுத்தர உதவி செய்வதாக உறுதி அளித்தார்.மேலும், இதுகுறித்து பெரும் நஷ்டத்தை சந்தித்த தம்பதியினர் கூறுகையில்,இது போன்ற வெள்ளம் இதுவரை வந்ததே இல்லை என்றும்... நேற்று வந்த வெள்ளத்தால் நல்ல விலைக்குப் போகவிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான கரிக்கட்டைகள் முற்றிலும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம் என்றும் இதிலிருந்து மீண்டு வர தமிழக அரசு தான் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.