விளாத்திகுளத்தில், பள்ளி மாணவிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய் : காயம் பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 2 பேர் உட்பட ஒன்றன்பின் ஒன்றாக சத்யா நகர், ஹை ஸ்கூல் ரோடு, மீனவன் பாளையம் தெரு, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக 15-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறியுள்ளது. இதனால் காயம் அடைந்தவர்கள் தற்போது விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து வெறிநாய்க்கடி விவகாரம் தொடர்பாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் இருந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக வெறிநாயைப் பிடிப்பதற்கு மதுரையில் இருந்து ஆட்களை வர வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே, விளாத்திகுளம் பகுதிகளில் அதிகப்படியான நாய்கள் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் நிலையில், தற்போது ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் விளாத்திகுளம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...