தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில்,  வருவாய் துறையினர் சார்பில் தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் என பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று "தேர்தல் பருவம் ; தேசத்தின் பெருமிதம்" எனும் தலைப்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையிலும், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையிலும் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தமிழ் நர்சிங் கல்லூரி மற்றும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், விளாத்திகுளம் வருவாய்துறை அதிகாரிகள், அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்திலிருந்து துவங்கிய இப்பேரணியை விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கிவைத்தார். கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தப்பு தாளங்கள் முழங்க நடைபெற்ற இப்பேரணியானது எட்டையபுரம் ரோடு, பேருந்து நிலையம், மதுரை ரோடு, கீழரத வீதி, காய்கறி மார்க்கெட் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது. மேலும் இப்பேரணியில் மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும், வாக்குரிமை என வாக்காளர்கள் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழிநெடுகிலும் இருந்த பொதுமக்களுக்கு வழங்கியும், கோஷமிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில், விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, வருவாய் ஆய்வாளர் ராணி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் (தேர்தல் பிரிவு) பாலமுருகன், ராஜ்குமார் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.