விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்காவில், கொடியிறக்கம் நிகழ்ச்சி: இரவு விருந்துடன் சந்தனக்கூடு திருவிழா நிறைவு!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற "மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹாவில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் 'சந்தனக்கூடு திருவிழாவானது' மதவேறுபாடின்றி அனைத்து தரப்பு மதத்தினராலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கடந்த செப்டம்பர் 16-ந்தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியநிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் "சந்தனக்கூடு ஊர்வலம்" மற்றும் திருவிளக்கு பூஜை கடந்த 29-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மதப்பாகுபாடின்றி, இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என பலதரப்பட்ட மதத்தினரும் ஒற்றுமையாக கலந்துகொண்டு மத ஒற்றுமையைப் போற்றும் விதமாக விளக்கேற்றி வழிபட்டனர். இந்நிலையில் தர்காவில் கொடியிறக்கம் நிகழ்ச்சி ஏராளமான இஸ்லாமியர்கள் முன்னிலையில் தற்போது நடைபெற்றது. இதில் தலைமுறை தலைமுறையாக கொடியேற்றும் மற்றும் கொடியிறக்கும் இறைப்பணியைச் செய்து வரும் அக்கிராமத்தைச் சேர்ந்த முகைதீன் பிச்சை என்பவர் கொடிமரத்தில் ஏறி கொடியை இறக்கினார். பின் அங்கிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. மேலும் இந்த தர்காவிலேயே உணவு சமைக்கப்பட்டு இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு விருந்துடன் சந்தனக்கூடு திருவிழா சிறப்பாக நிறைவடைந்தது.