விளாத்திகுளம் அருகே ஜின்னிங் பாக்டரியில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பருத்தி பஞ்சு மூட்டைகள் , இயந்திரங்கள் சேதம் .

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுரைக்காய்பட்டி பகுதியில் காமராஜ் என்பவருக்கு சொந்தமான ஜீசஸ் ஜின்னிங் பேக்டரி செயல்பட்டு வருகிறது. இங்கு பருத்தியிலிருந்து பருத்தி விதை மற்றும் பஞ்சுகளை இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊழியர்கள் வழக்கம்போல் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் பஞ்சு பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் மோட்டார் வெப்பமாகி அதிலிருந்து தீப்பொறி உருவாகி பருத்தி மூட்டைகள் மற்றும் பஞ்சுகளில் நெருப்பாக பரவியது. இதனை கண்ட  பணியாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பருத்தி மூட்டைகள் பஞ்சுகள் தீக்கிரையாகின. ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அருகில் இருந்த  நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீரை குடங்களில் எடுத்து வந்து பஞ்சுகளில் ஊற்றினர். தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு  வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.