விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாச்சியர் கீழ விளாத்திகுளம், கத்தாளம்பட்டி கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் பட்டா, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை 553 ஏக்கர் நிலங்களில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்தும்.விவசாயிகளை விசாரணை என்ற பெயரில் வட்டாச்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அலைக்கழிப்பதை கண்டித்தும் விவசாயிகள் பெயரிலேயே நில உரிமை தொடர்ந்திட வலியுறுத்தியும்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் தலைமை தாங்கினார். மகாராஜன், லட்சுமணப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஆர்.ராகவன், மாவட்ட துணைத் தலைவர்கள் தி.சீனிவாசன் ஐ.கணபதி துணைச் செயலாளர் செல்வராஜ் தாலுகா தலைவர் ஆர்.ராமலிங்கம் செயலாளர் மலைக்கனி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜோதி, மற்றும் கீழ் விளாத்திகுளம்,கத்தாளம்பட்டி கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.போராட்டம் முடிவில் விளாத்திகுளம் வட்டாட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.