தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையபுரம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக இடையூறும் வட்டத்துக்குட்பட்ட மானாவாரி விவசாய விளை நிலங்களில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த உளுந்து பாசி மக்காச்சோளம் கம்பு மிளகாய் சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. அதுமட்டுமின்றி பல கிராமங்களில் ஏற்பட்ட கண்மாய் உடைப்பின் காரணமாக பல்வேறு கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் இன்று எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் மாவட்டச் செயலாளர் ஆத்திராஜ் தலைமையில் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று விவசாய பாதிப்புகளுக்கான நிவாரண தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும், மழையினால் பாதிப்படைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு அளிக்க சென்று இருந்தனர். அலுவலகத்தில் வட்டாட்சியர் இல்லாத காரணத்தினால், விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமாரிடம் அளிக்க சென்றனர். அப்போது, துணை வட்டாட்சியர் செல்வகுமார் தனது இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டே விவசாயிகள் அழுகிய பாதிப்படைந்த செடிகளை காட்டுவதற்காக எடுத்து வந்த உளுந்து பயிர்களை எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டே ..... விவசாயிகள், மிகவும் வேதனையுடன் தங்கள் விளை நிலத்தில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கூறிக் கொண்டிருந்தபோது சரிவர கேட்டுக்கொள்ளாமல் "எனக்கென்ன நஷ்டம்" என்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டு அலட்சியமாக கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் இறுதியாக விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவையும் அமர்ந்து கொண்டே பெற்றுக் கொண்டார். மனு அளிக்க வந்திருந்த அனைத்து விவசாயிகளையும் கால்மணி நேரமாக நிற்க வைத்தே பேசிக்கொண்டு துணை வட்டாட்சியர் மட்டும் மட்டும் உட்கார்ந்து கொண்டு பேசியது விவசாயிகளிடைய முகச் சோர்வையும், முணுமுணுப்பையும் ஏற்படுத்தியது.