விளாத்திகுளம் அருகே மழை பொய்த்துப் போனதால் செடி கூட முளைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை : 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் பாதிப்பு : தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பிர்காவிற்கு உட்பட்ட பகுதிகளான பூசனூர், புளியங்குளம், குளத்தூர், வேடநத்தம், வைப்பார் உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் உளுந்து, பாசி, சோளம் உள்ளிட்ட பயிர்களை விதைத்தனர். ஆனால் குளத்தூர் பிர்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது வரை மழை பெய்யாத காரணத்தினால் சுமார் 500 ஏக்கருக்கு மேல் பயிர் செய்த விவசாய நிலங்களில் செடி கூட முளைக்காத நிலைதான் இன்றளவும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் சோகமடைந்துள்ளனர். மேலும், நிலத்தை உழுவது தொடங்கி, விதை, உரம், வேலையாட்கள் கூலி என ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம் என்றும், இங்கு மழை பெய்யாத காரணத்தினால்  செடி கூட முளைக்கவில்லை.... முளைத்த ஒன்று, இரண்டு செடிகளும் காய்ந்தே கருகிப்போகியுள்ளதாகவும் கண்ணீர் விடாத குறையாக வேதனையுடன் கூறுகின்றனர் விவசாயிகள்...ஆகையால், மழை பெய்த்துப்போன காரணத்தினால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள குளத்தூர் பிர்காவை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மழை பொழிவின்றி காணப்படும் இப்பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்... இல்லையேல் சாகதான் வேண்டும் என்று விவசாயிகள் கனத்த குரலில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.