தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி ஆதிலட்சுமி. இவரது கணவர் திருஞானம் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் தனியாக வறுமையில் வாழ்ந்து வந்த மூதாட்டி ஆதிலட்சுமிக்கு தமிழக அரசு சார்பில், "நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு நில ஒப்படை செய்யும் சிறப்பு திட்டம், 2006"-ன் படி,  கே.தங்கம்மாள்புரம் கிராமத்தில் புல எண் : 140/4-ல் 89 சென்ட் விவசாய நிலம் வழங்கப்பட்டது. இதில் மூதாட்டி ஆதிலட்சுமி மானாவாரி விவசாயம் மட்டுமே செய்து வந்த நிலையில், அப்போதையைச் சேர்ந்த சிலர் மூதாட்டி ஆதிலட்சுமியின் விவசாய நிலத்தில் குடிசை மற்றும் மாட்டு கொட்டகை அமைத்து ஆதிலட்சுமியின் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த மூதாட்டி ஆதிலட்சுமி காவல் நிலையத்திற்கும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் சென்று ஆக்கிரமிப்பு பற்றிய புகார் அளித்து தனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என அளித்துள்ளார். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டிய விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், மூதாட்டி ஆதிலட்சுமியின் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக மூதாட்டி ஆதிலட்சுமியை ஒருமையில் பேசி, நிலத்தின் ஆணையை ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டியதாக மூதாட்டியின் உறவினர்கள் விளாத்திகுளம் வட்டாட்சியர் மீது குற்றச்சாட்டு வைக்கின்றனர்.   அதுமட்டுமின்றி, வட்டாட்சியரின் கடுமையான பேச்சினால் மனமுடைந்த மூதாட்டி உடல்நலக்குறைவு ஏற்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.  இதனால் இது பற்றி கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்‌ என தமிழக முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர் . கணவரை இழந்து வறுமையில் வாடிய மூதாட்டி ஆதிலட்சுமிக்கு அரசு இலவசமாக வழங்கிய விவசாய(புஞ்சை) நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் குடிசை அமைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மூதாட்டியின் குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.