தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் விலக்கு அருகே உள்ள ஹோட்டலில் சப்ளையராக கயத்தார் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் சரவணன்(44) என்பவரும், புரோட்டா மாஸ்டராக கரடிகுளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பால்பாண்டி(48) என்பவரும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வழக்கமாக வேலை முடிந்தவுடன் தினமும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் மது அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கட்டிலில் யார் படுத்து தூங்குவது என்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக முற்றியுள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்த நபர் இருவரையும் சத்தம் போட்டு சமாதானம் செய்து வைத்துள்ளார். அதனால் இவர்கள் மது போதையில் அப்படியே தூங்கிவிட்டனர். பின்னர் மீண்டும் அதிகாலையில் கட்டிலில் படுப்பதற்கு சண்டை வர‌.... போதை தலைக்கேறிய புரோட்டா மாஸ்டர் பால்பாண்டி, அங்கிருந்த செங்கலை எடுத்து சப்ளையர் சரவணனை கொடூரமாக தாக்கி அடித்துள்ளார். அக்காலத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது சரவணன் இரத்த வெள்ளத்தில் சுய நினைவின்றி கிடைப்பதை கண்டு சிகிச்சைக்காக உடனடியாக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், எட்டையபுரம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் பணி மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் சரவணனை அங்கிருந்து உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பெற்று மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சரவணனின் சகோதரர் முருகன் அளித்த புகாரின் பேரில் எட்டையபுரம்  காவல்துறையினர்  கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்துள்ளனர்.மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி பால்பாண்டி மீது ஏற்கனவே எட்டையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.